தானெனை முன்படைத்தான்... சுந்தரர் தேவாரம்

 

அ௫ளியவர் :  சுந்தரர்   திருமுறை : ஏழாம்-திருமுறை 

பண் : பஞ்சமம்   நாடு :வடநாடு           தலம் :  கயிலாயம் (நொடித்தான்மலை)

சுவாமி : கைலாயநாதர்; அம்பாள் கைலாயநாயகியம்மை.  

 



தானெனை முன்படைத் தானத

  றிந்துதன் பொன்னடிக்கே

நானென பாடலந் தோநாயி

  னேனைப் பொருட்படுத்து

வானெனை வந்தெதிர் கொள்ளமத்த

  யானை அருள்புரிந்து

ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.   1 

 

ஆனை உரித்த பகைஅடி

  யேனொடு மீளக்கொலோ

ஊனை உயிர்வெருட் டிஒள்ளி

  யானை நினைந்திருந்தேன்

வானை மதித்தம ரர்வலஞ்

  செய்தெனை ஏறவைக்க

ஆனை அருள்புரிந் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.   2 

 

மந்திரம் ஒன்றறி யேன்மனை

  வாழ்க்கை மகிழ்ந்தடியேன்

சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்

  தொண்டனெனை

அந்தர மால்விசும் பில்அழ

  கானை அருள்புரிந்த

துந்தர மோநெஞ்ச மேநொடித்

  தான்மலை உத்தமனே.   3 

 

வாழ்வை உகந்தநெஞ் சேமட

  வார்தங்கள் வல்வினைப்பட்

டாழ முகந்தவென் னைஅது

  மாற்றி அமரரெல்லாஞ்

சூழ அருள்புரிந் துதொண்ட

  னேன்பரம் அல்லதொரு

வேழம் அருள்புரிந் தான்நொடித்

தான்மலை உத்தமனே.   4  


மண்ணுல கிற்பிறந் துநும்மை

  வாழ்த்தும் வழியடியார்

பொன்னுல கம்பெறு தல்தொண்ட

னேனின்று கண்டொழிந்தேன்

விண்ணுல கத்தவர் கள்விரும்ப

  வெள்ளை யானையின்மேல்

என்னுடல் காட்டுவித் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.   5 

 

அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்

  கொண்டடி சேர்வறியா

வஞ்சனை யென்மன மேவைகி

  வானநன் னாடர்முன்னே

துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட

  னேன்பர மல்லதொரு

வெஞ்சின ஆனைதந் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.   6 

 

நிலைகெட விண்ணதி ரநில

  மெங்கும் அதிர்ந்தசைய

மலையிடை யானையே றிவழி

  யேவரு வேன்எதிரே

அலைகட லால்அரை யன்அலர்

  கொண்டுமுன் வந்திறைஞ்ச

உலையணை யாதவண் ணம்நொடித்

  தான்மலை உத்தமனே.   7 

 

அரவொலி ஆகமங் கள்அறி

  வாரறி தோத்திரங்கள்

விரவிய வேதஒ லிவிண்ணெ

  லாம்வந் தெதிர்ந்திசைப்ப

வரமலி வாணன்வந் துவழி

  தந்தெனக் கேறுவதோர்

சிரமலி யானைதந் தான்நொடித்

  தான்மலை உத்தமனே.   8 


இந்திரன் மால்பிர மன்னெழி

  லார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த

  யானை அருள்புரிந்து

மந்திர மாமுனி வர்இவ னாரென

   எம்பெருமான்

நந்தமர் ஊரனென் றான்நொடித்

தான்மலை உத்தமனே.   9 


ஊழிதோ றூழிமுற் றுமுயர்

  பொன்னொடித் தான்மலையைச்

சூழிசை யின்கரும் பின்சுவை

  நாவல ஊரன்சொன்ன

ஏழிசை இன்றமி ழால்இசைந்

  தேத்திய பத்தினையும்

ஆழி கடலரை யாஅஞ்சை

  யப்பர்க் கறிவிப்பதே.  10


கருத்துகள்