அப்பர் தேவாரம் - ஒன்று கொலாம் - விடம் தீர்த்த பதிகம்

 

அ௫ளியவர் :  திருநாவுக்கரசர்     திருமுறை : நான்காம்-திருமுறை  பண் : இந்தளம்

நாடு :பொது                  தலம் :  பொது             சிறப்பு: —  விடந்தீர்த்ததிருப்பதிகம்

ஒன்றுகொ லாமவர்

  சிந்தை யுயர்வரை

ஒன்றுகொ லாமுய

  ரும்மதி சூடுவர்

ஒன்றுகொ லாமிடு

  வெண்டலை கையது

ஒன்றுகொ லாமவர்

  ஊர்வது தானே.   1 

 

இரண்டுகொ லாமிமை

  யோர்தொழு பாதம்

இரண்டுகொ லாமிலங்

  குங்குழை பெண்ணாண்

இரண்டுகொ லாமுரு

  வஞ்சிறு மான்மழு

இரண்டுகொ லாமவர்

  எய்தின தாமே.   2 

 

மூன்றுகொ லாமவர்

  கண்ணுத லாவன

மூன்றுகொ லாமவர்

  சூலத்தின் மொய்யிலை

மூன்றுகொ லாங்கணை

  கையது வில்நாண்

மூன்றுகொ லாம்புர

  மெய்தன தாமே.   3 

 

நாலுகொ லாமவர்

  தம்முக மாவன

நாலுகொ லாஞ்சன

  னம்முதற் றோற்றமும்

நாலுகொ லாமவர்

  ஊர்தியின் பாதங்கள்

நாலுகொ லாமறை

  பாடின தாமே.   4 

 

அஞ்சுகொ லாமவர்

  ஆடர வின்படம்

அஞ்சுகொ லாமவர்

  வெல்புல னாவன

அஞ்சுகொ லாமவர்

  காயப்பட் டான்கணை

அஞ்சுகொ லாமவர்

  ஆடின தாமே.   5 

 

ஆறுகொ லாமவர்

  அங்கம் படைத்தன

ஆறுகொ லாமவர்

  தம்மக னார்முகம்

ஆறுகொ லாமவர்

  தார்மிசை வண்டின்கால்

ஆறுகொ லாஞ்சுவை

  யாக்கின தாமே.   6 

 

ஏழுகொ லாமவர்

  ஊழி படைத்தன

ஏழுகொ லாமவர்

  கண்ட இருங்கடல்

ஏழுகொ லாமவர்

  ஆளு முலகங்கள்

ஏழுகொ லாமிசை

  யாக்கின தாமே.   7 

 

எட்டுக்கொ லாமவர்

  ஈறில் பெருங்குணம்

எட்டுக்கொ லாமவர்

  சூடு மினமலர்

எட்டுக்கொ லாமவர்

  தோளிணை யாவன

எட்டுக்கொ லாந்திசை

  யாக்கின தாமே.   8 

 

ஒன்பது போலவர்

  வாசல் வகுத்தன

ஒன்பது போலவர்

  மார்பினில் நூலிழை

ஒன்பது போலவர்

  கோலக் குழற்சடை

ஒன்பது போலவர்

  பாரிடந் தானே.   9


பத்துக்கொ லாமவர்

  பாம்பின்கண் பாம்பின்பல்

பத்துக்கொ லாமெயி

  றுந்நெரிந் துக்கன

பத்துக்கொ லாமவர்

  காயப்பட் டான்றலை

பத்துக்கொ லாமடி

  யார்செய்கை தானே. 10

 

* இது அப்பூதிநாயனார் புத்திரரைத்       தீண்டிய விடம் நீங்கும்படி அருளிச்செய்தது.  

கருத்துகள்